இந்திய கிரிக்கெட் உலகின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து, சீனியர் வீரர் இஷான் கிஷன் வெளியிட்டுள்ள ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த வைபவ், இரண்டாவது போட்டியில் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் 81 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமான இஷான் கிஷன், வைபவ் சூர்யவன்ஷியைப் பாதுகாக்க இந்திய அணி ஒரு மிகத் தெளிவான திட்டத்தை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஷான் கிஷன், வைபவ் மிகவும் புத்திசாலியான வீரர் என்றும், ஆனால் அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவரைச் சமூக வலைதளங்களில் இருந்தும், தேவையற்ற வெளிப்புற சத்தங்களில் இருந்தும் தள்ளி வைக்க ஒட்டுமொத்த அணியும் முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்கள் ஒரு வீரரின் கவனத்தை எளிதில் சிதறடிக்கக்கூடும். எனவே, வைபவ் தனது ஆட்டத்தில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, சீனியர் வீரர்கள் அவரிடம் கிரிக்கெட்டைத் தவிர வேறெதுவும் பேசுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஷான் கிஷன் ஒரு மூத்த சகோதரனாக வைபவ்-க்கு சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தானும் வைபவ்-வும் ஒரே பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால், தான் ஆரம்ப காலத்தில் செய்த தவறுகளை வைபவ் செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
“நாங்கள் அவரிடம் ஒரு சகோதரர் போலப் பழகுகிறோம். அக்ஷர் பட்டேல், அபிஷேக் சர்மா என அனைவரும் வைபவ்-ஐ எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம். ரன்கள் எடுக்காத சமயத்தில் அவர் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக அவரது உடல் மொழியைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம்” என்று இஷான் கிஷன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பவர்பிளே ஓவர்களில் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டும் வைபவ் போன்ற ஒரு அபூர்வத் திறமை கொண்ட வீரர் இந்திய அணிக்குக் கிடைத்த பொக்கிஷம். அத்தகைய ஒரு வீரர் தவறான காரணங்களால் திசைமாறி விடக்கூடாது என்பதில் இந்திய அணி நிர்வாகம் மிகவும் தெளிவாக உள்ளது.
கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டால், வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் அடுத்த மிகப்பெரிய அடையாளமாக மாறுவார் என்பதில் சந்தேகமில்லை என்று இஷான் கிஷன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
