2200 ட்ரோன்கள், 550 ஏவுகணைகள்! UAE-ஐக் காப்பாற்றிய இஸ்ரேலின் ‘Iron Dome’!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கொழுந்துவிட்டு எரியும் போர் பதற்றத்திற்கு இடையே, உலகம் இதுவரை எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய இராஜதந்திர மற்றும் ராணுவக் கூட்டணி இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஈரானின் இடைவிடாத ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரகம் நிலைகுலைந்து போயிருந்த வேளையில், அந்த நாட்டைப் பாதுகாக்க இஸ்ரேல் தனது உலகப்புகழ் பெற்ற ‘அயர்ன் டோம்’ (Iron Dome) ஏவுகணைத் தடுப்பு அமைப்பை ரகசியமாக அனுப்பி உதவியுள்ளது. சுமார் 550 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2,200-க்கும் மேற்பட்ட தற்கொலைப்படை ட்ரோன்களை ஏவி அமீரகத்தின் முக்கிய

உள்கட்டமைப்புகளை ஈரான் குறிவைத்தபோது, இந்த ‘அயர்ன் டோம்’ தொழில்நுட்பமே அந்த நாட்டைப் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளது என்ற அதிரடித் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவ உதவியின் பின்னணியில் ஒரு மிக முக்கியமான தொலைபேசி உரையாடல் ஒளிந்துள்ளது.

ஈரானின் தாக்குதல் தீவிரமடைந்த ஒரு இக்கட்டான நள்ளிரவில், அமீரக அதிபர் முகமது பின் சயீத் நேரடியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொடர்பு கொண்டு அவசர உதவி கோரியுள்ளார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நெதன்யாகு, எவ்விதத் தாமதமும் இன்றி அயர்ன் டோம் பேட்டரிகளையும், அவற்றை இயக்குவதற்குத் தேவையான தனது ராணுவ வீரர்களையும் அமீரகத்திற்கு அனுப்பி வைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

வரலாற்றிலேயே முதன்முறையாக இஸ்ரேல் தனது அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வேறொரு நாட்டுக்குக் கொடுத்து உதவியிருப்பது இதுவே முதல் முறையாகும். இஸ்ரேலிய வீரர்களின் உதவியுடன் இயக்கப்பட்ட இந்த அயர்ன் டோம் சிஸ்டம், அமீரகத்தை நோக்கி வந்த நூற்றுக்கணக்கான ஈரானிய ஏவுகணைகளை நடுக்கடலிலேயே தடுத்து அழித்து சாதனை படைத்துள்ளது. ஈரானின் அச்சுறுத்தல்களை முறியடிக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உதவி செய்திருந்தாலும், இஸ்ரேல் செய்த இந்த நேரடி ராணுவ உதவி அமீரகத் தலைவர்களை நெகிழச் செய்துள்ளது.

“இக்கட்டான நேரத்தில் உதவியவர்களே உண்மையான நண்பர்கள்” என்று அமீரகத்தின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் இஸ்ரேலைப் பாராட்டியுள்ளனர். இந்தப் போர்ச் சூழல் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மத்திய கிழக்கு அரசியலில் இது ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் பகை நாடுகளாக இருந்த இஸ்ரேலும் அரபு நாடுகளும், இப்போது ஈரானுக்கு எதிராக ஒன்று திரண்டு வருவது மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றி அமைக்கும் ஒரு நகர்வாக உள்ளது.

குறிப்பாக, ஈரானின் மிரட்டல்களுக்குப் பணியாமல் இஸ்ரேல் வழங்கிய இந்த ‘பாதுகாப்பு அரண்’, வரும் காலங்களில் ஒரு புதிய ராணுவக் கூட்டணியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இழுபறியில் இருக்கும் நிலையில், மறுபுறம் துப்பாக்கி முனையில் உருவான இந்த நட்பு உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது.

Related News

Latest News