ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி!

தேசிய ஓய்வூதியத் திட்டமான NPS-ல் முதலீடு செய்துள்ளீர்களா? உங்களுக்கான ஒரு மிக முக்கியமான செய்தி. பென்ஷன் ஃபண்ட் ஒழுங்குமுறை ஆணையம் தற்போது ஓய்வுக்கால நிதி விதிகளில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இது உங்கள் ஓய்வுக்காலத் திட்டமிடலையே மொத்தமாக மாற்றியமைக்கக்கூடியது.

முன்பெல்லாம் NPS-ல் இருந்து வெளியேறும்போது, உங்களுடைய மொத்த நிதியில் 40 சதவீதத்தை கட்டாயம் ‘அன்யூட்டி’ (Annuity) திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. ஆனால், புதிய விதிகளின்படி அது வெறும் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மெச்சூரிட்டியின் போது நீங்கள் 80 சதவீத தொகையை ஒரே தவணையாக (Lump sum) பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், உங்கள் முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருக்க வயது வரம்பு 75-லிருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். உங்களுடைய மொத்த கார்ப்பஸ் தொகை 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், எந்தவிதக் கட்டாயமுமின்றி, அதாவது அன்யூட்டி திட்டத்தில் முதலீடு செய்யாமலேயே, முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். 8 முதல் 12 லட்சம் ரூபாய்க்கும் இடையில் தொகை இருந்தால், 6 லட்சம் ரூபாயை உடனே பெற்றுக்கொள்ள முடியும்.

முன்பெல்லாம் 60 வயதுக்கு முன்பாக வெளியேறுவது மிகக்கடினமாக இருந்தது. ஆனால் இப்போது, புதிய விதிப்படி 15 வருட லாக்-இன் காலம் (Lock-in period) முடிந்துவிட்டால் போதும், உங்கள் வயது அல்லது பணி ஓய்வு எதைப் பொருட்படுத்தாமலும் நீங்கள் கணக்கை முடித்து வெளியேறலாம்.

அவ்வளவுதான், அவசரத் தேவைக்காக 60 வயதுக்கு முன்பாகப் பணம் எடுக்கும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்பு மூன்று முறை மட்டுமே பகுதிநேரப் பணம் எடுக்க முடியும் என்ற நிலையில், தற்போது அது நான்கு முறை என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் உங்கள் ஓய்வுக்காலத் திட்டமிடலுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் (Flexibility) சுதந்திரத்தையும் வழங்குகிறது. எனவே, உங்கள் முதலீட்டு முடிவுகளை இப்போதே மறுபரிசீலனை செய்யுங்கள்.

Related News

Latest News