தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இதில் அதிக கவனம் பெறும் பரப்புரை என்றால், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சாரம் ஆகும். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், இந்த கட்சியின் மூலம் முதன்முறையாக நேரடியாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார். அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பரப்புரையின் போது விஜய் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவதால் பெரிய கூட்டம் ஏற்படுகிறது. ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது வாகனத்தை தொடர்ந்து பின்தொடர்வதும் காணப்படுகிறது. இதனால் விஜயின் தேர்தல் பிரச்சாரம் தினந்தோறும் சமூக வலைதளங்களில் முக்கிய செய்தியாக மாறியுள்ளது.
இந்த சூழலில் விஜயுடன் வரும் பாதுகாப்பு பணியாளர்கள் (பவுன்சர்கள்) கைகளில் எடுத்துச் செல்லும் கருப்பு நிற பை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இது லேப்டாப் பேக் அல்லது சூட்கேஸ் போல தெரிந்தாலும், உண்மையில் அது ஒரு நவீன புல்லட் ப்ரூஃப் பை (Ballistic Shield Bag) என கூறப்படுகிறது.
அவசர சூழலில் தாக்குதல் அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால், ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் இந்த பை விரிந்து பாதுகாப்பு கேடயமாக மாறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் சின்தடிக் இழைகள் இரும்பை விட பல மடங்கு வலிமையானவை என கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டுகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகை பாதுகாப்பு சாதனங்கள் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் பிரபலங்கள் பயன்படுத்தும் நவீன பாதுகாப்பு முறையாக கருதப்படுகிறது. அதன் தரம் மற்றும் பிராண்டுக்கு ஏற்ப இதன் விலை பல லட்சங்களில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
