அகமதாபாத்தில் கடையில் வாங்கிய தோசை மாவில் செய்த தோசையை சாப்பிட்ட இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் பிரதான காலை உணவு மற்றும் இரவு நேர உணவாக இட்லி மற்றும் தோசை உள்ளது. தோசை மாவு, இயல்பாகவே புளிக்க வைக்கப்பட்ட அதாவது ferment ஆகும் உணவுகளில் ஒன்றாகும் என்பதால், இது செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இட்லி தோசை ஆகியவை பிரசித்தி பெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், விமல் என்பவர் ஏப்ரல் 1ம் தேதி கடை ஒன்றில் மாவை வாங்கியுள்ளார். இந்த மாவில் செய்த தோசையை சாப்பிட்ட அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு கடுமையான வாந்தி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 3ம் தேதி 3 மாத குழந்தையும், அதைத் தொடர்ந்து 4 வயது சிறுமியும் உயிரிழந்தனர். பெற்றோர்கள் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். கடையில் வாங்கப்பட்ட இந்த தோசை மாவு இவர்களுக்கு கடுமையான ஃபுட் பாய்சனிங்கை ஏற்படுத்தியிருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கடைகளில் விற்கப்படும் மாவுகள் ஏன் சில நேரங்களில் ஆபத்தானதாக மாறுகின்றன? அதற்கான காரணங்கள் இதோ
1.மாவு திறந்த நிலையில் வைக்கப்படுவதாலும், சரியான குளிர்சாதன வசதி இல்லை என்றாலும், பாக்டீரியாக்கள் வேகமாக வளர்கின்றன.
2.மாவு அரைக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமானதாக இல்லையெனில், அது காலரா அல்லது டைபாய்டு போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப் பரப்பும்.
3.மாவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும், வெண்மையாக இருக்கவும் சில கடைகளில் தேவையற்ற ரசாயனங்கள் மற்றும் பேக்கிங் சோடாவை அதிக அளவில் சேர்க்கின்றனர்.
4.பளபளப்பிற்காக இரசாயனம் பூசப்பட்ட அரிசி மற்றும் பருப்புகள் சரியாகக் கழுவப்படாமல் பயன்படுத்தப்படலாம்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
முடிந்தவரை வீட்டிலேயே அரிசி, பருப்பை நன்கு கழுவி மாவு அரைப்பது சிறந்தது.தேவைப்படும் போது, கொஞ்சம் கொஞ்சமாக அரைப்பது நல்லது.
மாவு புளித்தவுடன் அதை உடனடியாக ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். வெளியே நீண்ட நேரம் வைக்கக்கூடாது.
உணவை மென்மையாக்க இயற்கையான புளிக்க வேண்டும் எனவே, சோடா மாவைத் தவிர்க்க வேண்டும்.
கடையில் இட்லி தோசை மாவு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
மாவு பாக்கெட்டில் உள்ள ‘Date of Packing’ மற்றும் ‘Expiry Date’ ஆகியவற்றைச் சரிபார்க்கவும்.
மாவு பாக்கெட் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்படுகிறதா, ஐஸ் பெட்டியில் உள்ளதா அல்லது சாதாரண வெப்பநிலையில் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.
கோடை காலத்தில் வெளியில் வாங்கும் உணவுகள் மற்றும் மாவுகள் விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
