பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுக்கும் விதமாக, இந்தியா தனது வான்பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே நம்மிடம் இருக்கும் ரஷ்யத் தயாரிப்பான எஸ்-400 (S-400) ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் பாகிஸ்தானை கதிகலங்க வைத்த நிலையில், மத்திய அரசு மேலும் ஐந்து எஸ்-400 சிஸ்டங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘சுதர்ஷன்’ (Sudarshan) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை அமைப்பு, உலக அளவில் ஏற்படும் போர் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு வாங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையின் போது, இந்த எஸ்-400 சிஸ்டம் பாகிஸ்தானுக்குக் கொடுத்த அடி மரண அடி! பாகிஸ்தான் எல்லைக்குள் 300 கிலோமீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஒரு உளவு விமானத்தை இந்த சுதர்ஷன் சிஸ்டம் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்தது. இந்திய விமானப்படைக்கு இது ஒரு கேம் சேஞ்சராக (Game Changer) மாறியுள்ளது.
இப்போது கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு எல்லைகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த, மேலும் ஐந்து படைப்பிரிவுகளை (Squadrons) வாங்க இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவுள்ளது. இதுகுறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் டெண்டர் விடப்படும் என்றும் ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்திய விமானப்படை வெளியிட்ட வீடியோவில், இந்த எஸ்-400 ரேடார் எப்படி வெகு தொலைவில் வரும் எதிரி விமானங்களைக் கண்டுபிடித்து லாக் (Lock) செய்து அழிக்கிறது என்பது தத்ரூபமாகக் காட்டப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது.
