Monday, January 12, 2026

தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள் : அமைச்சர் சேகர்பாபு

சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.

இந்த நிகழ்வின் போது உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர். அமைச்சர் சேகர்பாபு வாக்குறுதி அளித்ததால் மகிழ்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தும், குத்தாட்டம் போட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தூய்மை பணியாளர்களுக்கு வாக்குறுதி அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, “5 மற்றும் 6 மண்டலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை ஈடுபட்டு வந்தனர். அரசும் தமிழ்நாடு முதலமைச்சரும் கடுமையாக நடந்துக்கொள்ள கூடாது என உத்திரவிட்டிருந்தார்.

சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக கண்ணியத்துடன் நடந்து கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் செயலாளர் முத்தரசன் உழைப்பர் உரிமையை இயக்க தலைவர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, மேயர், துணை மேயர் ஆகியோருக்கும் நன்றி. பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த மாதம் இறுதிக்குள் மீண்டும் சென்னை மாநகராட்சியின் கீழ் பணிய அமர்த்தப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும். ஊதியம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு பரிசீலனை செய்து முடிவு எடுக்கும். ஊழியர்களின் நலனுக்காக உழைப்போர் உரிமை இயக்கத்தினரும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள், நாங்களும் இரு பக்கமும் தட்டிக் கொடுத்து எந்த உதவிகள் எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வோம். தனியாருக்கு தூய்மை பணிகள் வழங்கப்பட்டது தொடர்பாக நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு பிறகு பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

Related News

Latest News