தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக, திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக அதிக அளவில் பணம் தேவைப்பட்ட நிலையில், தனது நண்பர் மூலம் திருநெல்வேலியைச் சேர்ந்த பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை அணுகினார்.
அப்போது, ரூ.35 கோடி கடன் பெற்று தருவதாக உறுதியளித்த ஹரி நாடார், அதற்குப் பிரதிபலனாக ரூ.70 லட்சத்தை தொழிலதிபரிடமிருந்து பெற்றுக்கொண்டார். ஆனால், அவர் கூறியபடி கடனை பெற்றுத் தரவில்லை. மேலும், வாங்கிய ரூ.70 லட்சத்தையும் திருப்பி வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரூ.70 லட்சம் மோசடி செய்தது உறுதியானதைத் தொடர்ந்து, ஹரி நாடாரையும், அவருக்கு உடந்தையாக இருந்த சேலத்தைச் சேர்ந்த பாபுவையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
