Friday, December 26, 2025

டிசம்பர் 26 ஐ மறக்கமுடியுமா? வரலாற்றின் மிக மோசமான பேரழிவு

சுனாமி தாக்குதலின் 21-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த துயர நாளில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர கிராம மக்கள், பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

டிசம்பர் 26, 2004. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிந்து, உலகம் நிம்மதியாக விடிந்த அந்த ஞாயிற்றுக்கிழமை காலை, ஒரு மாபெரும் இயற்கைச் சீற்றம் காத்திருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. சரியாக காலை 7 மணி 59 நிமிடத்திற்கு, இந்தோனேசியாவின் சுமித்ரா தீவு அருகே கடலுக்கு அடியில் ரிக்டர் அளவில் 9.1 என்ற அதிரவைக்கும் வேகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடலடியில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, ராட்சத அலைகளை உருவாக்கி, அடுத்த 7 மணி நேரத்தில் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் தலையெழுத்தையே மாற்றி எழுதியது. யாரும் எதிர்பாராத நேரத்தில் சுமார் 30 அடி உயரத்திற்கு எழும்பிய ஆழிப்பேரலைகள், கடற்கரை ஓரம் இருந்த வீடுகளையும், சுற்றுலாத் தலங்களையும் சுருட்டி எறிந்தன.

இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து என மொத்தம் 15 நாடுகளில் இந்த கோரத்தாண்டவம் அரங்கேறியது. வரலாற்றில் மறக்க முடியாத இந்த இயற்கைச் சீற்றத்தில் சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.

நம் தமிழகத்தில் நாகப்பட்டினம் முதல் சென்னை வரை கடற்கரை ஓரங்கள் சிதிலமடைந்தன. ஆயிரக்கணக்கானோர் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்தது இன்றும் ஒரு ஆறாத துயரமாக உள்ளது. கடலோரக் கிராமங்கள் மட்டுமல்லாது, அழகான கடற்கரை ஓய்வு விடுதிகளும், மீன்பிடித் தளங்களும், விவசாய நிலங்களும் உவர் நீரால் பாழாயின.

பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாகக் கழிக்க வந்த இடத்தில் சடலங்களாக மாறினர். சாலைகள் துண்டிக்கப்பட்டு, சுத்தமான குடிநீர் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் சுனாமிக்குப் பிந்தைய நாட்கள் நரகமாக மாறின.

இந்த மாபெரும் துயரம் உலகிற்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. அதன் விளைவாகவே 2005-ஆம் ஆண்டு ‘இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு’ (IOTWMS) உருவாக்கப்பட்டது. இன்று நம்மிடம் அதிநவீன தொழில்நுட்பங்களும், முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகளும் உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலோடு, கடற்கரை ஓர மக்கள் இப்போது சுனாமி குறித்த விழிப்புணர்வையும், தற்காப்புப் பயிற்சிகளையும் பெற்று வருகின்றனர்.

21 ஆண்டுகள் ஓடி மறைந்தாலும், அந்த ராட்சத அலைகள் ஏற்படுத்திய பாதிப்பும், மக்கள் சிந்திய கண்ணீரும் இன்றும் மாறவில்லை.

Related News

Latest News