சீனாவும் இந்தியாவும் உலகில் அதிகம் தங்கத்தை இறக்குமதி செய்து பயன்படுத்தும் முன்னணி நாடுகளாகும். இரு நாடுகளிலும் பாரம்பரியமாக மக்களிடம் தங்கம் வாங்கி சேமிப்பது பொதுப் பழக்கமாக உள்ளது. பண்டிகை காலங்களில் தங்கத்திற்கு அதிகமான டிமாண்ட் ஏற்படுகிறது. எனவே இந்த நாடுகளிலும் தங்கம் சம்பந்தமாக அரசுகள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் உலக தங்க வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சீன அரசு 2025 நவம்பர் 1 ஆம் தேதி முதல் தங்க வியாபாரிகளுக்கு வழங்கிய முக்கிய வரிச் சலுகையை நிறுத்தியுள்ளது. இதுவரை, ஷாங்காய் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் தங்கம் வாங்கி, அதனை தங்க நகை, தங்க கட்டி, தங்க நாணயம் என விற்பனை செய்ததில் மதிப்பு கூட்டு வரியை குறைக்க சலுகை வழங்கப்பட்டிருந்தது. இப்போது அந்த வரிச் சலுகை நிறுத்தப்படுவதால், வியாபாரிகள் தங்கம் வாங்குவதற்கான வரியை மறுபடியும் முழுமையாகச் செலுத்த வேண்டிய நிலை உருவாகி, அவர்கள் இந்தச் சுமையை வாடிக்கையாளர்களுக்கு மாற்றக்கூடும். இதனால் சீனாவில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தை மந்தம், பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகிய காரணங்களால் அரசின் நிதி நிலை பாதிக்கப்பட்டு, வருவாயை உயர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சீனாவில் தங்க விலை உயர்ந்து, மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. இதனால் உலக தங்க சந்தையில் குறைந்த டிமாண்ட் ஏற்பட்டு தங்கத்தின் விலை மாறுபடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நடைமுறை சீனாவின் தங்க சந்தையில் அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாகும். இதனால், இந்தியா உள்ளிட்ட பிற உலக சந்தைகளின் தங்க விலை நிலவரத்திலும் இதன் நேரடி தாக்கம் காணப்படலாம்.
