திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கணபதிபட்டியைச் சேர்ந்த ஆர்த்தி (21) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்கள் இருவரும் ராமநாயக்கன்பட்டியில் தனியாக வசித்து வந்தனர்.
திருமணம் முடிந்து தலைதீபாவளியை கொண்டாட காதல் தம்பதியினர் தயாராகி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ராமச்சந்திரனுக்கும் அவரது மாமனாருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மாமனார் அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டினார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைக்கு காரணமான அவரது மாமனார் சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததால் மருமகனையே மாமனார் வெட்டிக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
