அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு காரில் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, தனது முகத்தை மூடிக் கொண்டு செல்வதைப் போன்ற காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, டிடிவி தினகரன் பேசியதாவது: கூட்டணிக் கட்சித் தலைவரை டெல்லியில் சந்தித்துவிட்டு, முகத்தை மூடிக் கொண்டு தலைவர் ஒருவர் வருவதை வரலாற்றில் யாரும் பார்த்ததில்லை.
வானிலை காரணமாக தனது சுற்றுப்பயணத்தை தள்ளிவைப்பதாக கூறிவிட்டு, டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு ஏற்கெனவே ஊடகங்களில் வந்த செய்திதான். ஆனால், பொய் கூறி விட்டுச் செல்வது ஏன்?
”பழனிசாமியை இன்றுமுதல் முகமூடியார் பழனிசாமி என்று அழைக்க வேண்டும்.தமிழக மக்களையும் பிற அரசியல் கட்சியினரையும் இனிமேலும் பழனிசாமி ஏமாற்ற முடியாது. வருகின்ற தேர்தலில் எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தோல்வியை சந்திப்பது உறுதி.” எனத் தெரிவித்தார்.
