நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது புத்தகப்பையில் புத்தகங்களுக்கு இடையே கத்தியை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார்.
இதை பார்த்த ஆசிரியர்கள் உடனே திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளிக்கு வந்த போலீசார் அந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இது குறித்து அந்த மாணவனிடம் விசாரித்த போது அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவர் இதற்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவன் தன்னை ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயத்தில் இந்த மாணவர் முன்னெச்சரிக்கையாக புத்தகப் பையில் கத்தியை மறைத்து வைத்து வகுப்புக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதைக்கேட்டு ஆசிரியர்களும், சக மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவரை போலீசார் எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.