மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.
இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், நாளை தமிழ்நாட்டில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும் பணியாளர்களுக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.