சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், முக்கிய சாட்சியாக அந்த விடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் டிஜிபி க்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க தென்மண்டல ஐஜியின் உத்தரவின்பேரின் 2 காவலர்கள் ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.