2026ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வீட்டுப் பட்டியல் எண்ணிக்கை ஏப்ரல் 1, 2026 முதல் ஆரம்பமாகும் என இந்தியப் பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். 34 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்களைக் கொண்டு 2 கட்டங்களாக இது நடைபெறும். மேலும் இது டிஜிட்டல் முறையில் மொபைல் ஃபோன் மூலம் நடத்தப்பட உள்ளது.
இந்த கணக்கெடுப்பில், தொலைபேசி குறித்த விவரங்கள், இணையத்தள வசதி, வாகனங்கள் அதாவது சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், ஜீப், வேன் போன்றவை குறித்த தகவல்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் போன்றவற்றின் உரிமை குறித்து கேட்கப்படும்.
தானிய பயன்பாடு, குடிநீர் மற்றும் மின்சாரம், கழிப்பறைகளின் வகை, கழிவுநீர் அகற்றும் முறை குறித்தும், குளியல் மற்றும் சமையலறை வசதிகள், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் மற்றும் LPG அல்லது PNG இணைப்பு குறித்தும் மக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்படும்.
மேலும் வீட்டின் தரை, சுவர்கள் மற்றும் மேல்தளத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அதன் நிலை, குடியிருப்பவர்களின் எண்ணிக்கை, வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன என்பது, திருமணமான தம்பதிகளின் தகவல் மற்றும் வீட்டுத் தலைவர் பெண்ணா அல்லது பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்த கேள்விகளும் இதில் அடங்கும்.