அணுசக்தி என்றால் நினைவுக்கு வரும் நாடுகள் பெரும்பாலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மாதிரியான பெரிய சக்திகள் தான். ஆனால் தற்போது, மத்திய ஆசியாவின் ஒரு சிறிய வளமான நாடான கஜகஸ்தான், அணுசக்தி உலகத்துக்குள் ஒரு புதிய படியாக குதிக்கத் தயாராகியுள்ளது.
இருசமய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அணு ஆயுதச்சூழல் அதிகரித்திருக்கும் இந்த காலத்தில், கஜகஸ்தானும் அதனுடைய சொந்த அணு மின் நிலையம் கட்டும் திட்டத்தை துவங்கியுள்ளது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. இதில் ரஷ்யாவின் ரோசாட்டம்(Rosatom) நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு அணுமின் நிலையம் உருவாக்கப்பட உள்ளது. இந்த மின் நிலையம், பால்காஷ் ஏரிக்கு(Lake Balkhash) அருகிலுள்ள உல்கென் என்ற கிராமத்தில் கட்டப்பட உள்ளது.
குறிப்பாக, சீனாவும், பிரான்சும், தென் கொரியாவும் இந்த திட்டத்துக்கான ஏலத்தில் பங்கேற்றன. சீனாவின் தேசிய அணுசக்தி நிறுவனம், பிரெஞ்சு EDF, மற்றும் தென் கொரிய நீர் மற்றும் அணுசக்தி நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால், இறுதியில் ரஷ்யாவின் ரோசாட்டம் தான் ஒப்பந்தத்தை வென்றது. இருப்பினும், இந்த மூன்று நிறுவனங்களும் ரோசாட்டம் தலைமையிலான கூட்டமைப்பில் இணைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஏன் முக்கியம் என்றால், கஜகஸ்தான் உலகில் 43 சதவீதம் யுரேனியம் வழங்கும் நாடு. ஆனால் தானாகவே போதுமான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டுவருகிறது. இப்போது, ரஷ்யாவின் உதவியுடன், அதனுடைய சொந்த யுரேனிய வளங்களை வைத்து அணு மின் உற்பத்திக்குள் இறங்குகிறது.
தகவல்களை மேலும் ஆழமாக நோக்கினால், கஜகஸ்தான் ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்தபோது அணு ஆயுதங்களும், அணு மின் நிலையங்களும் இருந்த நாடு. 1991ல் சோவியத் ஒன்றியம் கலைந்த பிறகு, கஜகஸ்தான் தனது அணு ஆயுதங்களை கைவிட்டு, மின் நிலையங்களை மூடியது. ஆனால் இப்போது, சக்திவாய்ந்த நாடுகளுடன் ஒத்துழைத்து, புதுசாக ஒரு அணுசக்தி அத்தியாயத்தை துவக்க இருக்கிறது.
கஜகஸ்தான் அதிபர் டோகாயேவ் கூறியது போல, ரஷ்யாவுடனும் சீனாவுடனும் நல்லுறவுகளை பேணுவதே அவர்களது நோக்கம். இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், வரவிருக்கும் மத்திய ஆசிய உச்சிமாநாட்டுக்காக கஜகஸ்தானுக்கு வர உள்ளார் என்பது, இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தைக் மேலும் உயர்த்துகிறது.
குழப்பமில்லாமல், சரியான பக்கம் பார்த்து, கஜகஸ்தான் உலக அணுசக்தி மேடையில் தனது இடத்தைப் பிடிக்கத் தயாராகியுள்ளது.