குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில், 241 பேர் பலியான சம்பவம் உலகளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே இந்த விமானத்தில் லண்டனுக்கு பயணம் செய்த, பயணிகளின் சொந்த கதைகள் விமான விபத்தை விடவும் அதிக சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அந்தவகையில் மனைவியின் இறுதிச் சடங்கிற்கு வந்த கணவர், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் வசித்து வருபவர் அர்ஜுன் பாய் மனுபாய் பட்டோலியா. இவருக்கு 8 மற்றும் 4 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக மனைவி அண்மையில் இறந்து விட்டார்.
அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, மனைவியின் அஸ்தியுடன் இந்தியாவிற்கு அர்ஜுன் வந்தார். குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தை சேர்ந்த வாடியா என்னும் கிராமம் தான் இவரின் சொந்த ஊராகும். அங்குள்ள ஆறு மற்றும் குளத்தில் மனைவிக்கு இறுதி சடங்குகளை செய்துவிட்டு, மீண்டும் லண்டனுக்கு செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார்.
மோசமான இந்த விபத்தில் 241 பேருடன் சேர்ந்து அர்ஜுனின் உயிரும் பறிபோயுள்ளது. ஏற்கனவே தாயை இழந்த அந்த சின்னஞ்சிறு குழந்தைகள், தற்போது தந்தையையும் இழந்து தவிக்கின்றனர். இந்த செய்தியை அறிந்த பலரும், ” விமான விபத்தை விடவும், இதுபோன்ற செய்திகள் தான் மனதை அதிகம் கலங்கடிக்கின்றன”, என்று சமூக வலைதளங்களில் கனத்த இதயத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.