கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற, மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக அகமதாபாத் விமான சம்பவம் அமைந்துள்ளது. ஜூன் 12ம் தேதி மதியம் 242 பேரை சுமந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியது.
இதில் 241 பேர் பலியாக ஒருவர் மட்டும் நல்வாய்ப்பாக தப்பி பிழைத்துள்ளார். இந்தியாவை உலுக்கிய இந்த விமான விபத்துக்கு, மொத்த உலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது. இந்த நேரத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் கடைசி தருணங்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி, காண்போரின் இதயத்தை கலங்கடித்து வருகின்றன.
ராஜஸ்தானை சேர்ந்த பெண் மருத்துவர் கோமி வியாஸ், தன்னுடைய 8 வயது மகள் 5 வயது இரட்டை ஆண் குழந்தைகள் மற்றும் கணவருடன் இந்த விமானத்தில் பயணித்துள்ளார். கோமி வியாஸின் கணவர் 6 ஆண்டுகளாக லண்டனில் என்ஜினீயராக பணிபுரிந்துள்ளார். குடும்பத்துடன் அங்கு செட்டிலாக வேண்டும் என்பது இவர்களின் ஆசை.
இதனால் தன்னுடைய மருத்துவர் வேலையை உதறிய கோமி, கணவர் குழந்தைகளுடன் இந்த விமானத்தில் பயணித்துள்ளார். எதிர்கால கனவுகளை சுமந்து சென்ற குடும்பத்தினரை, இந்த விமான விபத்து காவு வாங்கிவிட்டது. இவர்களின் கடைசி புகைப்படம் கண்ணில் நீரை வரவழைக்கிறது.
இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த இங்கிலாந்து நாட்டினர், அகமதாபாத் விமான நிலையத்தில் ” மீண்டும் இங்கிலாந்து திரும்புகிறோம். குட் பை இந்தியா லவ் யூ” என்று பேசும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. லண்டனில் வேலை பார்க்கும் கணவருடன் சேர்ந்து வாழ புறப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, 21 வயது புதுமண பெண் குஷ்பூ இந்த விபத்தில் உயிரிழந்தார்.
மணிப்பூரை சேர்ந்த 22 வயதான விமானப் பணிப்பெண் நந்தோய் சர்மா (Nganthoi Sharma) மற்றும் பாலிவுட் நடிகர் விக்ரந்த் மேஸ்ஸியின் உறவினரும், துணை விமானியுமான கிளிவ் குந்தர் (Clive Kunder) ஆகியோரும் இதில் உயிரிழந்து உள்ளனர். மொத்தத்தில் ஏகப்பட்ட கனவுகளுடன் பயணித்த 241 உயிர்களை, இந்த மோசமான விமான விபத்து பலிவாங்கி விட்டது.