சிலருக்கு சாப்பிட்டவுடனேயே தூக்கம் வருவது சாதாரணம். ஆனால், பெரும்பாலானோர் குறிப்பாக மதிய உணவுக்குப் பிறகு தூக்கத்தில் மூழ்கும் நிலையை அனுபவிக்கிறார்கள். இது அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு மிகுந்த தொந்தரவை ஏற்படுத்துகிறது. இந்தத் தூக்கம் எதனால் வருகிறது என்பதை நாம் யோசித்திருக்கிறோமா?
உணவுக்குப் பிறகு ஏற்படும் தூக்கம் ஒரு நோயல்ல. இது நம் உடலின் இயற்கையான உயிரியல் செயல்பாடுகளில் ஒன்றாகும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். சரியான தூக்கம் இல்லாதவர்கள், செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், உணவுக்குப் பிறகு தூக்கம் அதிகம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள், அரிசி, ரொட்டி, உருளைக்கிழங்கு மற்றும் இனிப்புகள் போன்றவை அதிகமாகச் சாப்பிடப்படும் போது, உடலில் இன்சுலின் அளவு உயருகிறது. இது மூளையில் தூக்கத்தை தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. அதன் விளைவாக, தூக்க உணர்வு அதிகமாகும்.
இந்த நிலையை சமாளிக்க, சீராக மற்றும் சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். மேலும், உணவுக்குப் பிறகு சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் தூக்க உணர்வையும் சோம்பலையும் குறைக்க முடியும்.