இந்தியா, தனது பாதுகாப்பு தயார்நிலையை ஒரு புதிய கட்டத்துக்கு உயர்த்தியுள்ளது. மத்திய அரசு தற்போது இந்திய ராணுவத்திற்கு ரூ.40,000 கோடி மதிப்பிலானஅவசர கொள்முதல் அதிகாரம் வழங்கியுள்ளது. இந்த அதிகாரத்தின் மூலம், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை எந்தவிதமான அமைச்சரவை ஒப்புதலும் இல்லாமல், டெண்டர் போடாமலும், நேரடியாக முக்கியமான போர் உபகரணங்களை வாங்க முடியும்.
இந்த முடிவு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டது. இதில் ஒப்பந்தங்கள் 40 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்; விநியோகம் ஒரு வருடத்தில் நிறைவடைய வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த திட்டம், இந்தியா எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு நேரடி பதிலாகவே பார்க்கப்படுகிறது… பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின்போது, பவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த இடங்கள் உலகளாவிய பயங்கரவாதத்தின் நடுவழியாக இருந்தன. பஹல்காம் தாக்குதல், நாட்டையே உலுக்கிய நிலையில், பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை “நியூ நார்மல்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலைக்கேற்ப, இந்திய பாதுகாப்பு செலவுகளும் இப்போது அதிகரிக்கப் பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ.6.81 லட்சம் கோடி பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 9.2% அதிகம்.
ஆனால் மொத்த ஜிடிபியின் 1.9% மட்டுமே பாதுகாப்புக்காக செலவாகிறது. இனி இந்த வீதமும் உயர வாய்ப்பு உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கூடுதல் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு வரும் துணை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மொத்த பாதுகாப்பு ஒதுக்கீடு ரூ.7 லட்சம் கோடியைத் தாண்டும்.
இந்த நிதி, ஏவுகணைகள், ட்ரோன்கள், வெடிமருந்துகள், மற்றும் ஆராய்ச்சி மேம்பாடுகள் உள்ளிட்ட முக்கிய போர் உபகரணங்களுக்காக பயன்படுத்தப்படும். இந்தியாவின் பாதுகாப்பு துறை இப்போது ஒரு புதிய நிலைப்பாட்டை நோக்கி வேகமாகவும், வலிமையாகவும் நகர்கிறது.