ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, அசாம் காவல்துறை நாடு முழுவதும் “ஆபரேஷன் கோஸ்ட் சிம்” என்ற அதிரடி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அட அது என்ன “ஆபரேஷன் பேய் சிம்” என்று தானே கேட்கிறீர்கள்? இதற்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு, இப்படியெல்லாம் கூட உளவு வேலை பார்க்க முடியுமா, இந்தியாவை முடக்க யார் இப்படி யோசிக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த பதிவு.
கடந்த 2024ல் TRAI ஒரு விதிமுறையை கொண்டுவந்தது நமக்கு நினைவிருக்கும். அதாவது நாடுமுழுவதும் பயன்பாட்டில் உள்ள 80 லட்சம் போலி சிம் கார்டுகளை Deactivate செய்யும் நடவடிக்கை தான் அது. ஆனாலும் அப்படி அந்த 80 லட்சம் சிம் கார்டுகள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டதா என்று கேட்டால் அதுதான் இல்லை. அங்கு தான் உருவானது இந்த கோஸ்ட் சிம். இந்த “பேய் சிம்” போலியான ஆவணங்களை வைத்து உருவாக்கப்பட்டு முறைகேடான தேச விரோத செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
அதாவது இந்த கோஸ்ட் சிம்மில் Whatsapp இன்ஸ்டால் செய்யப்பட்டு அதை Activate செய்ய அனுப்பப்படும் OTP பாகிஸ்தானுக்கு சென்று அங்கு இருக்கும் யாரோ ஒருவர் Whatsapp-ஐ Activate செய்துவிடுவார். அப்படியென்றால் சிம் கார்ட் இந்தியாவை சேர்ந்தது. ஆனால் பயன்படுத்தப்படுவது பாகிஸ்தானில். எப்படி எல்லாம் மோசடி செய்றாங்க பாருங்க… இப்படி Activate ஆன சிம்களை வைத்து குறிவைக்கப்படுபவர்கள் இந்தியாவை சேர்ந்த உயர் அதிகாரிகள். பல்வேறு விதமான வலைகளை விரித்து அவர்களிடமிருந்து முக்கியமான தகவல்கள் பெறப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் திரைக்கு மறைவில் இருப்பவர் யார் என அந்த சிம் கார்டை தேடிப்போனால் அங்கு அப்படி ஒரு நபர் இருக்கவே மாட்டார். அதனால் தான் அது “பேய் சிம்”
தற்போது “ஆபரேஷன் கோஸ்ட் சிம்” நடவடிக்கையின் கீழ் இதுவரை 22 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.