தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசைஞானி இளையராஜா. இவருக்கு மத்திய அரசு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கி கவுரவப்படுத்தியது. மேலும் பல்வேறு திரைப்படங்களுக்காக இளையாராஜா எண்ணற்ற விருதுகளை வாரிக்குவித்துள்ளார்.
இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை அரங்கேற்றம் லண்டனில் நேற்றிரவு நடைபெற்றது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய சிம்பொனி அரங்கேற்றத்தை அனுபவிக்க உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வந்தனர்.
வெறும் 35 நாட்களில் சிம்பொனியை எழுதிய இளையராஜா, அதனை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிம்பொனி மட்டும் 45 நிமிடங்களுக்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.
Eventim Apollo அரங்கத்தில் சிம்பொனி இசையை, மெய்மறந்து ரசிகர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.