தங்களின் குழந்தைக்கு Border என்று பெயர் சூட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் ஒரு பெற்றோர்.
பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தின் ராஜன்பூர் மாவட்டம் இந்திய எல்லைப் பகுதியை ஒட்டி உள்ளது. அந்த மாவட்டத்தின் தலைநகரான ராஜன்பூர் நகரைச் சேர்ந்த 99பேர் ஒரு குழுவாக இந்தியாவுக்கு ஆன்மிக யாத்திரை வந்தனர். அவர்களோடு கர்ப்பிணியான நிம்பு பாய்- பலாம் ராம் தம்பதியினரும் வந்தனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு தங்கள் நாட்டுக்குத் திரும்பும்வேளையில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி நிம்பு பாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர்கள் தங்கியிருந்த கிராமப்புறப் பெண்கள் நிம்பு பாய் சுகப் பிரசவம்பெற உதவியுள்ளனர். நிம்பு பாயும் அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.
குழந்தைக்கு வித்தியாசமான பெயர் சூட்ட விரும்பிய பெற்றோர் பார்டர் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.
அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும்போது பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து விசாரித்ததில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
பார்டர் என்று பெயர் சூட்டிய விசயம் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.