GST சீர்திருத்தத்தால் அரசுக்கு இத்தனை கோடி இழப்பா?

ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் மக்கள் தினசரி பயன்படுத்தும் சுமார் 375 பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் ஜி.எஸ்.டி. விகிதங்கள் 5%, 12%, 18%, மற்றும் 28% என நான்கு அடுக்குகளாக இருந்தன. இதனால் சில பொருட்களின் விலை அதிகரித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.இதையடுத்து மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. இதனுடன், முன்பு இருந்த நான்கு அடுக்குகளுக்கு பதிலாக எளிமையான இரண்டு அடுக்குகள், 5% மற்றும் 18% என்ற வகையில் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளது.

இதனால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் (பால், வெண்ணெய், சீஸ்), தேநீர், காபி, தானியங்கள், பிஸ்கட்கள், கார்ன்ஃபிளேக்ஸ், உலர் பழங்கள், பழச்சாறு, ஜாம், கெட்ச்அப், சாசேஜ்கள், இறைச்சி மற்றும் குடிநீர் ஆகிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது.

அதேபோல் சோப்பு, எண்ணெய், ஷேவிங் கிரீம், ஷாம்பு, முகக் கிரீம், டால்கம் பவுடர் போன்ற பயன்பாட்டுப் பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. மேலும், சாதாரண மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயறிதல் கருவிகளின் விலைகளில் குறைந்துள்ளது.

இந்த ஜி.எஸ்.டி. வரி மாற்றங்களின் காரணமாக மத்திய அரசு சுமார் ரூ. 2 லட்சம் கோடி வருவாய் இழப்பை சந்திக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இருப்பினும், பொருட்களின் விலை குறைப்பால் நுகர்வோர் அதிக பொருட்களை வாங்கும் என்பதால் இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எதிர்பார்க்கப்படுகிறது.