நடைப்பயிற்சி செல்வதற்காக இளம் காதலர்கள் சொந்த வீடு வாங்கி
அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளனர்.
‘எலி வளையானாலும் தனி வளை’ என்பார்கள். அதாவது, சிறிய
அளவிலானது என்றாலும், சொந்தமாக ஒரு வீடு தேவை என்பதையே
அனைவரும் லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். நல்ல வேலை
அமைந்து சிறப்பான முறையில் திருமணம் முடிந்து, வங்கியில்
லோன் பெற்று சொந்தமாக ஒரு வீடு வாங்குவதற்குள் பலருக்கும்
போதும் போதும் என்றாகிவிடும்.
ஆனால், இங்கிலாந்தில் ஓர் இளம் காதலர்கள் சொந்த வீட்டுக்
கனவை எளிதாக நிறைவேற்றியுள்ளனர். சுவாரஸ்யமான
அவர்களின் காதலைப் பற்றிப் பார்ப்போமா…
லண்டனைச் சேர்ந்த 20 வயதாகும் ஒலிவியா கில் என்னும்
இளம்பெண்ணும் 22 வயதாகும் ஜாக் ஈகோட் என்னும் இளைஞனும்
சிறுவயதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதல்
பூங்காவில் நடைப்பயிற்சிப் பயணத்தின்மூலம் தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், அவர்களின் காதலுக்கு இடையூறு ஏற்படுத்திவிட்டது
கொரோனா ஊரடங்கு. அதற்காக காதலை விட்டுவிட முடியுமா என்ன..?
இளங்கன்றுகள் இரண்டும் தீவிரமாகவும் புத்திசாலித்தனமாகவும்
சிந்தித்தன. அதன்விளைவாக, புதிதாகப் பெரிய வீடு ஒன்றை வாங்க
முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து அவர்களிருவரும் வங்கியில்
ஜாயின்ட் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி தங்கள் பாக்கெட் மணியை
சேமித்து வந்தனர். அவர்களின் முயற்சிக்கு இங்கிலாந்து அரசின் ‘ஹெல்ப்
டு பை’ திட்டமும் உதவியது.
இந்தத் திட்டத்தின்படி, வீட்டு உரிமையாளர்களின் 5 சதவிகித வைப்புத்
தொகையுடன் ஒரு வீட்டை வாங்குவதற்கு அரசு உதவுகிறது. இதனைப்
பயன்படுத்தித் தங்களுக்கென்று ஒரு சொந்த வீட்டை வாங்கிவிட்டனர்
இந்த இளம் காதலர்கள்.
‘கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப் பார்’ என்பார்கள். இந்த
இளம் காதலர்களோ திருமணத்துக்கு முன்பே சொந்த வீடு வாங்கி
அநேகத் தம்பதிகளை வியப்பில் ஆழ்த்திவிட்டனர்.