டெல்லியில் மிகவும் மோசம் அடைத்த காற்றின் தரம்

299

டெல்லியில் தீபாவளி தினமான நேற்று காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. உலகிலேயே நேற்று மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூரும் பதிவாகியுள்ளது.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 312 என்ற அளவில், மிகவும் மோசமான அளவில் பதிவாகியுள்ளது. தீபாவளி நாளான நேற்று உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூரும் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியன்றும் டெல்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்தது. மேலும் டெல்லியின் நெருங்கிய நகரங்களான காஜியாபாத்தில் காற்றின் தரக்குறியீடு 301ஆகவும், நொய்டாவில் 303ஆகவும் பதிவாகியுள்ளது. குருகிராமில் 325ஆகவும், ஃபரிதாபாத் 256ஆகவும் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதாலும், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதாலும் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்றதால் முக்கிய இடங்களில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.