போலி ஆவணங்கள் மூலம் 97 லட்சம் ரூபாய் மோசடி

260

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி.

இவர் பணியாற்றிய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை சுற்றியுள்ள கிராமத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், போலி ஆவணம் மூலம் மோசடி செய்த கூட்டுறவு வங்கி மேலாளர் உமா மகேஸ்வரியை கைது செய்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் வழக்கின் அடுத்தக்கட்டமாக உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.