பாரத் பந்த் – மின்சாரம், வங்கி, ரயில்வே சேவைகள்பாதிப்பு ?

479
Advertisement

அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாமானியர்களைப் பாதிக்கும் பல அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள் ) நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு “தொழிலாளர் விரோத, விவசாயி விரோத,” எதிராக முன்மொழியப்பட்ட இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கான பல்வேறு மாநிலங்கள் மற்றும் துறைகளில் ஆயத்தங்கள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் சாலையோர, போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் அறிக்கையின்படி , மத்திய பாஜக அரசு உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது, EPF வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாகக் குறைத்தது, பெட்ரோல், எல்பிஜி, மண்ணெண்ணெய், சிஎன்ஜி போன்றவற்றின் திடீர் உயர்வு உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டு உள்ளது.

அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் ஐஎன்டியுசி, சிஐடியு,ஏஐடியுசி, ஏஐசிசிடியு, எச்எம்எஸ்உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த சங்கங்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இந்தியா முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்கள் என சுமார் 25 கோடி பேர் பங்கேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்பதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கக் கூடும் என்பதால் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை ,அரசு ஊழியர்கள் அந்த 2 நாட்கள் பணிக்கு வராவிட்டால் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்து இருக்கிறார்.அனைத்து மாவட்டங்களிலும் தடையின்றி ரயில், பேருந்து போக்குவரத்து நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து பேருந்து பணிமனைகள், முக்கிய இரயில் , பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது மேலும் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .