தூத்துக்குடி: காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொலை

198

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் ரேஸ்மாவும், உறவினரான மாணிக்கராஜும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ரேஸ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு இருவரும் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு ரேஸ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஊர் பஞ்சாயத்தார் அழைத்து பேசி, காதல் தம்பதியரை தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை ரேஸ்மா மற்றும் மாணிக்கராஜை முத்துக்குட்டி வெட்டி படுகொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த எட்டையாபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர்