பிரசாரம் ஓய்ந்த பிறகு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது….

78
Advertisement

கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது.

அதன்பின்னர் வாக்குப்பதிவு முடியும் வரை யாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று கர்நாடக மக்களுக்கு கடிதம் எழுதினார். அதில், கர்நாடகாவை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் பணிக்காக உங்கள் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறேன் என கேட்டுக்கொண்டார்.

தேர்தலுக்கு முந்தைய நாளில் பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோள், தேர்தல் விதிமீறல் என பலரும் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியும் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று கூறியது. அத்துடன், இந்த விஷயத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததற்காக, அவர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.