விமானத்தில் முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிகளை இறக்கிவிட உத்தரவு

363

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர் சமீபத்தில் விமான பயணம் மேற்கொண்டபோது, விமானத்தில் கொரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து புகார் எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.

அப்போது, விமானத்தில் முகக்கவசம் அணியாதவர்களை No Fly List என அழைக்கப்படும் விமான பயணம் மேற்கொள்வதற்கான தடை விதிக்கப்பட்ட நபர் பட்டியலில் சேர்க்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இந்நிலையில், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விமானத்தில் முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அப்படியும் முகக்கவசம் அணியாவிட்டால், விமானம் புறப்படும் முன்பாக அவர்களை கீழே இறக்கி விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு உள்ளூர் போலீசார், பாதுகாப்பு படைகளின் உதவியை நாடலாம் என்றும் மேலும், சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு அபராதமும் விதிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.