அபுதாபியில் நடைபெற்ற 19வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் வீரர் கேமரூன் கிரீன் 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர், என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கடுமையாக போட்டியிட்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்கி இருக்கிறது. இந்தநிலையில் பிசிசிஐ அறிமுகம் செய்திருக்கும் புதிய விதியால், கிரீனுக்கு மொத்த தொகையும் கிடைக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது.
புதிய விதியின்படி 18 கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு வீரர்கள் ஏலம் போனால், 18 கோடி ரூபாய் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள தொகை இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்காக செலவிடப்படும் என, அந்த விதியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக கிரீனுக்கு 18 கோடி ரூபாயில் வரிபிடித்தம் போக மீதமுள்ள தொகை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
