சென்னை நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பு

359

தீபாவளி பண்டிகையையொட்டி அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், சென்னை உட்பட முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்கள் நேற்று காலை முதல் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். மாலையில் நிகழ்ததப்பட்ட வாணவேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது. சில இடங்களில் இரவு 10 மணிக்கு பிறகும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்ததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புகைமண்டலமாக காட்சி அளித்தது.

இந்நிலையில், சென்னையில் காற்று மாசு அபாயகரமான அளவிற்கு அதிகரித்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் காற்றில் நுண் துகள்களின் அளவு 109 என இருந்த நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் 192 என்ற அளவாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.