தலைசிறந்த முதலமைச்சர்களில் ஒருவர்மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ஐ.பெரியசாமி

347

இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக கூட்டுறவு துறை வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும் விழா நேற்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு கடன் வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். முதல்வரின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்படும் விதமாக பல்வேறு வகையில் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளையும், கடன்களையும் வழங்கி வருகிறோம்.

அதன்படி கடந்த ஆண்டுகளில் ஆட்சி செய்தவர்களின் நிலையில் சென்றிருந்தால் கூட்டுறவுத்துறை அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். தமிழக முதல்வர் அவருடைய சீரிய நடவடிக்கையின் காரணமாக இன்றைக்கு இந்தியாவிலேயே மிகச்சிறந்த வகையில் கூட்டுறவுத் துறை செயல்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறையில் விவசாயத்தில் மட்டுமே கடன் வழங்காமல் பன்முகத் தன்மையோடு இன்றைய காலத்திற்கு ஏற்ப அனைத்து விதமான கடன்களும் வட்டி இன்றி வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கை ஏற்படுத்தி, இன்றைக்கு சுய உதவி குழுக்கள், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் என்ற வகையில் கடன் வழங்கி வருகிறோம்.

பெண்களை தொழில் முனைவோர் ஆக்கி எந்த வகையிலும் ஏழ்மை நிலை இல்லாத குடும்பங்களை உருவாக்கவே கூட்டுறவுத்துறையில் இதுபோன்ற கடன்களை வழங்க முதலமைச்சரின் ஆலோசனைப்படி வழங்கி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.