டிரோன் மூலம் தபால் வினியோகம்

234

இந்தியாவில் விவசாயம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ‘டிரோன்’ பயன்பாட்டை அதிகப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் மிகப்பெரிய டிரோன் திருவிழாவான ‘பாரத் டிரோன் மஹோத்சவ் 2022’ ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் விவசாயம், விளையாட்டு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்றார்.

இந்த நிலையில் இந்திய தபால் துறை முதல் முறையாக ‘டிரோன்’ மூலம் தபால் வினியோகம் செய்து சாதனைப்படைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் தபால் துறை மூலம் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஹபே கிராமத்தில் இருந்து நெர் என்கிற கிராமத்துக்கு டிரோனில் தபால் அனுப்பப்பட்டதாகவும், அந்த டிரோன் 25 நிமிடத்தில் 46 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அடைந்து, தபாலை வினியோகம் செய்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியின் மூலம், எதிர்காலத்தில் டிரோன் மூலம் தபால் வினியோகத்தை எளிதாக மேற்கொள்ள முடியும் என இந்திய தபால் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.