தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் வேர் முதல் நுனி வரை பலன் தரக்கூடிய கற்பக விருட்சமாக உள்ளது.
பனைமரத்தின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள பிளாமிச்சம்பட்டியில் பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இரு பிரிவுகளாக நடைப்பெற்ற இந்த பந்தயத்தில், சிறுவர்களும், பெரியவர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இரு பிரிவுகளிலும் முதல் இடத்தைப் பிடித்த வீரர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், 500 ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசாக 400 ரூபாய் ரொக்கமும், மூன்றாம் பரிசாக 300 ரூபாய் ரொக்கமும், நான்காம் பரிசாக 200 ரூபாய் ரொக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற நுங்கு வண்டி பந்தய போட்டியை, சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த மக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.