ஜி-20 மாநாடு – மூன்று முக்கிய அமர்வுகளில் மோடி

190

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று இந்தோனேசியா புறப்படும் பிரதமர் மோடி, மூன்று முக்கிய அமர்வுகளில் பங்கேற்க உள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகள் அடங்கிய ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அண்மையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ‘ஜி-20’ அமைப்பின் சின்னம், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை வெளியிட்டார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில், கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து பாலி நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும், உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் மோடியும் மற்ற நாடுகளின் தலைவர்களும் விவாதிக்க இருப்பதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.