வாட்ஸ்அப் வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

213

எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்று தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக சார்பில் கடைபிடிக்கப்படும் திராவிட மாதத்தின் கடைசி நாளான நேற்று, டிவிட்டரில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடம் தமிழருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது என்றும், சமூக நீதியை நிலை நாட்டியது என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்த திராவிடம், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிர வைத்ததுள்ளதாக குறிப்பிட்டார்.

தொழில் நுட்பத்தை தமிழகத்தின் வளர்ச்சிக்கும் கழகத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். செய்தியின் உண்மை தன்மையை அறிந்து பிறகே, அதனை சமூக வலைதளத்தில் பகிர வேண்டும் என கேட்டுக்கொண்டார். எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.

நமது எதிரிகள், மதவாத சாதியவாத சக்திகள், அவதூறு பேசுபவர்களை புறந்தள்ளி ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.