ஆருத்ரா மோசடி வழக்கு.. சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் மனு.. போலீசுக்கு ஹைகோர்ட் அவகாசம்…

128
Advertisement

ஆருத்ரா மோசடி வழக்கில் சம்மனை எதிர்த்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவர் ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடி தொடர்பாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர்.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆவணங்களுடன் ஆஜராக அனுப்பியுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் இல்லை. எனவே, சம்மனை ரத்து செய்யப் போவதாகவும், வேண்டுமானால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்புமாறு காவல்துறையிடம் தெரிவித்தார்.

அப்போது,காவல் துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, சம்மனை ரத்து செய்ய வேண்டாம். இந்த சம்மன் அனுப்பப்பட்டது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காவல்துறை பதிலளிக்கும்வரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆர்.கே.சுரேஷ் தரப்பில் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, காவல் துறை பதிலளிக்கும் அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.