மீண்டும் சீனாவில் ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா

379
corona
Advertisement

தொடங்கிய இடத்தையே மீண்டும் தொற்றி ஆட்டிப் படைக்கத் தொடங்கியுள்ளது கொரோனா.

தற்போது சீனத் தலைநகர் பீஜிங்கில் 9 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், கிருமிநாசினியைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்துகொள்ளவும் சீன அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். பாதிப்புக்குள்ளானோரைக் கண்டறிவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது சீனா, கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், தொற்றுநோய்ப் பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தொற்றியவர்களைத் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகளும் மூடப்பட்டுகின்றன. விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டு வருகின்றன. ஹோட்டல் முன்பதிவுகளையும் ரத்துசெய்ய உத்தரவிட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.

சுமார் 43 ஆயிரம் குடும்பங்கள் வீட்டைவிட்டு வெளியே வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 93 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஷாங்காயிலிருந்து மங்கோலியா வரை ஒரு சுற்றுலாக் குழு பல இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளது. அந்தக் குழுவிலிருந்த ஒரு வயதான தம்பதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்தத் தம்பதியிடமிருந்து ஜியாங்கு, செச்சுவான், லியானின், கூனான், கூபெய் ஆகிய ஐந்து மாகாணங்களிலும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. 13க்கும் அதிகமான நகரங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இதனால், அந்த 5 மாகாணங்களில் உள்ளோர் அனைவருக்கும் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவிலுள்ள வூகான் நகரில் கோவிட் 19 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கட்டுப்படுத்துவதற்குள்ளாக உலகம் முழுவதும் பரவிவிட்டது.

இரண்டாண்டுகளாக முதல் அலை, இரண்டாவது அலை என மிரட்டி வரும்நிலையில் சீனாவோ தங்கள் நாட்டில் கொரோவைக் கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறியது. ஆனால், இன்றுவரை முழுமையாகக் குணப்படுத்த முடியாமல், பல்வேறு நாடுகள் தவித்துவருகின்றன.
ஆனால், சீனாவோ தங்கள் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறி, ஹோட்டல், சுற்றுலாத்தலங்கள், பள்ளி, கல்லூரிள் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வந்துவிட்டது போலக் காட்டிக்கொண்டது.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பதுபோல, சீனாவில் மீண்டும் அசுர வேகத்தில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.

நமது நாட்டில் தற்போது கட்டுக்குள் கொரோனா பரவல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டினாலும் பொதுமக்களும் முகக் கவசம் அணிதல், கூட்டம் சேர்வதைத் தவிர்த்தல், கிருமிநாமினி பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

தொடர்ந்து பண்டிகைகள் வருவதாலும், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் உள்ளதாலும் கொரோவைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதே சத்தியம் தொலைக்காட்சியின் அன்பு வேண்டுகோள்.