தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது

236

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, கடந்த வாரம் தொடங்கியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக பெய்தது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், தென்மேற்கு வங்கக் கடலில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரண்டு தினங்களில், வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி, நகரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மீண்டும் வடகிழக்கு பருவமழை, தீவிரமடைய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக, மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக் கடல், தென் கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் ஆகிய இடங்களில் மணிக்கு, 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதிகளுக்கு வரும் 12 வரை மீனவர்கள், செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.