மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

324
Advertisement

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .இந்நிலையில் , ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பராமரிப்பு பணியை துவங்க ,இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து , இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு எதிராக மாசு ஏற்படுவதால் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. இருப்பினும் கொரோனா காலத்தின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை செய்து தேவையான மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என உறுதி அளித்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கொரோனா கால தேவைக்காக மருத்துவ ஆக்சிஜனை தயாரிக்க மட்டுமே அனுமதி மற்றும் தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்திய பிறகு இந்த ஆலையை திறக்க நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி ஆலை திறக்கப்பட்டு, ஆக்சிஜன் தேவை முடிந்ததும் மீண்டும் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் ஆலையை திறக்க வேதாந்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து , இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.